பேஸ்புக் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா? உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும்
பெற்றோரா. இணையப் பாவனைக் குறித்தும் அதன் நன்மை தீமைகள் குறித்தும் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா ? அவற்றை உங்களது குழந்தைகளோடு பேசி விட்டீர்களா?
அதே போல இன்று பெருமளவு சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவது வெகு இயல்பாகி விட்டது. அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பினை எப்படி நல்ல பெற்றோராக நீங்கள் தடுக்கப் போகின்றீர்கள்.
பேஸ்புக் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பேஸ்புக் மன அழுத்தம் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விடயங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போக்கு, பேஸ்புக் போன்ற தளங்களில் ஜொலிக்க அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் போன்றவற்றை பெற்றோர்கள் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை.
குழந்தைகள் சமூக தளங்களினை குறைவாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதே போல அவற்றை கண்டிப்பாக பெற்றோர்கள் கண்காணித்தல் அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இன்றையே தேவையே பெற்றோர்களுக்கான விழிப்புணர்வே என அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்.
பல சமயங்களில் பெற்றோர்களுக்கு இணையங்களைப் பயன்படுத்தவே தெரிவதில்லை, இதனால் குழந்தைகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவவும் முடியாமல் போய் விடுகின்றது.
குறிப்பாக குழந்தைகளும், பதின்ம வயதில் இருப்போரும் பேஸ்புக் போன்ற தளங்களை எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள் என அறிய வேண்டும். அதாவது பெரும்பாலான குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்துவது மகிழ்வானது எனவும், பள்ளிகளில் தம்மை விட பிற மாணவர்கள் பேஸ்புக்கில் படங்களை பகிர்ந்துக் கொள்வது பெருமையாக இருப்பதால் தாமும் அப்படியாக செய்கின்றார்கள் எனவும் நினைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
பல பதின்ம வயதினர் அனாமத்தாக நூற்றுக்கணக்கான அறியாதவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். பல நண்பர்களை வைத்திருந்தால் பெருமையாக நினைக்கும் குழந்தைகளே அதிகம். ஆனால் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் உணர்வதில்லை. பெற்றோர்களும் அதனை அறிவதில்லை அல்லது கண்டுக் கொள்வதே இல்லை.
பேஸ்புக் தரும் மன அழுத்தத்துக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிப்படையச் செய்து விடும் என்பது உண்மை.
பேஸ்புக், ஆர்குட் என்பது வெறும் நண்பர்களோடும், குடும்பத்தரோடும் உரையாடு ஒரு பாலமே என குழந்தைகளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். அவற்றில் புகைப்படங்களை இடுவதும், அதிக நண்பர்களை இணைப்பதும், ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பதன் தவறை உணர்த்த வேண்டும்.
பெற்றோர்களும் தமக்கான ஒரு பேஸ்புக், ஆர்குட் கணக்கை ஆரம்பித்து குழந்தைகளை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க முடியும். அப்படி அவர்கள் பெற்றோரை இணைப்பதில் விரும்ப மறுக்கிறார்கள் என்றால் நிச்சயம் குழந்தைகள் சிக்கலில் இருக்கிறார்கள் என உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
பேஸ்புக்கில் அனாமத்தாக நபர்களை சேர்ப்பதும், தனிப்பட்ட முகவரி, செல்பேசி எண்களை பகிர்தல், புகைப்படங்களைப் பகிர்தல் ஆகியவை பல்வேறு பிரச்சனைகளை அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. அதே போல மிகச் சிறுவயதாக இருக்கும் குழந்தைகள் பேஸ்புக் போன்ற தளத்தில் இணைவதைக் குறைப்பது தான் நன்று. அதே போல பேஸ்புக் போன்ற தளங்களில் மணிக்கணக்கில் குழந்தைகள் பயன்படுத்துவதையும், இரவு நேரங்களில் பயன்படுத்துவதையும் தடுப்பது அல்லது குறைப்பதே நன்று.
எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்கனவே உங்களது குழந்தைகள் பேஸ்புக் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும். அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று தகுந்த கலந்தாலோசனைக் கொடுப்பதே அவர்களின் நல்வாழ்வை உறுதிசெய்யும்.
எழுத்து: இக்பால் செல்வன்
நன்றி.tamilcharam